


குருக்கள் மட மனித புதை குழி இடத்தை பார்வையிட்ட நீதிபதி
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –
கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு குருக்கள் மடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (11) வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி, புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு காத்தான்குடி திரும்பிய ஹாஜிகள் மற்றும் வியாபாரிகள், கல்முனை மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் பகுதியில் கடத்திக் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதுடன், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கே இவ்வாறு அழைக்கப்பட்டது.
இதையத்து இவ்வாறு கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சமுகமளித்த நிலையில் களுவாஞ்சிக்குடி நீதவான் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குருக்கள்மட மனித புதை குழி என அடையாளமிடப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் அங்கு வருகை தந்திருந்த
அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு கட்டளை பிறப்பித்தார்.
இந்த பணியில், புவிச்சரிதவியல் மற்றும் தொல்லியல் திணைக்களம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சியல் நிறுவனம் ஆகியவைகளின் உயர் அதிகாரிகள்
பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர் உட்பட முறைப்பாட்டாளர்
ரஊப் ஏ மஜீட் குரல்கள் அமைப்பின் சட்டத்தரணிகள் , சம்மேளன பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் குறித்த இடத்திற்கு சமுகமளித்திருந்தனர்.
