அம்பாறை மாவட்டத்தில் 162வது வருட  பொலிஸ் வீரர் தின நிகழ்வு.

162வது வருட பொலிஸ் வீரர் தினம்

(பாறுக் ஷிஹான்)

162வது வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றதுடன், இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வில், மௌன அஞ்சலியைத்தொடர்ந்து பொலிஸ் கொடியேற்றப்பட்டதுடன் பொலிஸ் நினைவுத்தூபிக்கு விசேட பொலிஸ் மரியாதை நிகழ்வுகளுடன் நினைவுத் தூபிக்கு மலர் வளையம் மற்றும் மலர்க்கொத்துக்கள் வைத்து அஞ்சலி சனிக்கிழமை(21) செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்ல கலந்து கொண்டு பொலிஸ் கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்க விட்டார்.

அதனை தொடர்ந்து உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் இடம்பெற்றதுடன், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்னாலுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபிக்கருகில் பூச்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.

மேலும் அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை பொலிஸ் போர் வீரர்கள் பிரிவுப்பொறுப்பதிகாரி சம்பத் விக்ரமரத்ன, அம்பாறை தலைமையகப்பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் குணவர்தன, அம்பாறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸ் வீரர்களின் உறவினர்கள், அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஓய்வுபெற்ற மற்றும் தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் உட்பட உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நிகழ்வில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் “இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு இன்று வரை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் தினத்தில் அவர்களை நாம் நினைவுகூர்வதோடு அவர் தம் குடும்பத்தினரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது

பொலிஸ் சேவை என்பது பொது மக்களுடன் மிகவும் நெருங்கிய ஒரு சேவையாகும். அவர்களது இன்பத்திலும் துன்பத்திலும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவை இன்றியமையாததாக காணப்படுகின்றமையே அதற்கான காரணமாகும். இரவு பகல் பாராது கடமையாற்றி வீர மரணமடைந்த அனைத்து பொலிஸ் வீரர்களும் மார்ச் மாதம் 21ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றனர். இவர்கள் இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் கடமையைச் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.பொலிஸார் முன்னுதாரணமான தேசியப் பிரஜைகளாக இன மத பேதமின்றிக் கடமையாற்றி நாட்டில் சமாதான சகவாழ்வை நிலை நிறுத்துவதில் பாடுபட்டு வந்துள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது உயிர்நீத்த பொலிசாரின் உறவினர்களின் நலன்கள் ஆராயும் செயற்பாடும் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவினால் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top