இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து  அநுராதபுரத்தில்  உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கைக்கு மூன்று நாள் அரச பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து இன்று (06) முற்பகல் அநுராதபுரத்தில்  உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

உடமலுவவை வந்தடைந்த இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்கநாயக்க வண, பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரைச் சந்தித்து, உரையாடலில் ஈடுபட்டார்.

தான் பிறந்த  குஜராத் பிரதேசத்தில் 60களில்  மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த நினைவுச்சின்னங்களை இலங்கையில் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடுவதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

புத்த கயாவை ஆன்மீக நகரமாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அட்டமஸ்தானாதிபதி தேரர் விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் அது தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

அட்டமஸ்தானாதிபதி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், பிரித் பாராயணம் செய்து இந்தியப் பிரதமருக்கு ஆசிர்வதித்தனர்.

மேலும், இந்தியப் பிரதமர் ஜய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயிலையும் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top