இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிராம சேவகர் பிரிவு ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட 330 குடும்பங்களுக்கு பொருட்கள் மற்றும் குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் கலந்து கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கி வைத்தார்.
மேற்படி நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் அஹமட் அப்கார், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று அதிகாரி ஆர்.ராஜ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கஜேந்திரன் உட்பட ஏறாவூர் நகரப் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களான எம்.எம்.அஸ்ரப், என்.அப்துல் கபூர் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் உத்தியோகத்தர்கள், தொண்டர்கள் என பலர் பங்கேற்று இருந்தனர்.
மேற்படி வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்விற்கு ஹேமாஸ் நிறுவனமும் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




