தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றக்கோரி முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதேச சபை செயலாளருக்கு கடிதம்
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மற்றும் மாவடிச்சேனை முஸ்லிம் பிரதேசங்களில் நீண்ட நாட்களாக திண்மக்கழிவகற்றல் செயன்முறை முறையாக நடைபெறாமல் குப்பைகள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் அவலநிலை தொடர்பில் இன்றைய தினம் 2025.05.21ம் திகதி புதன்கிழமை புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளருக்கு எழுத்து மூலமாக கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் குப்பைகளை அகற்றுவது தொடர்பில் சிறந்த பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்பட வேண்டுமெனவும் எதிர்காலத்தில் திண்மக்கழிவகற்றலை ஒரு பிரச்சினையாக எமது மக்கள் பார்க்காத வண்ணம் அவை நெறிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கைக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிரதேச சபை செயலாளர் உடனடியாக குப்பைகளை அகற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாவும் எதிர்காலத்தில் சிறந்த பொறிமுறையொன்றை உருவாக்கி முறையாக திண்மக்கழிவகற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.
குறித்த சந்திப்பின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்களான ALA.கபூர், TLM.சித்தீக், ML.அனஸ் மற்றும் SIM.இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.