CASED நிறுவனத்தின் மனித வள முகாமைத்துவ ஒரு வருடகால கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
செய்தியாளர்-
M.N.M.அக்மல்-(மட்டக்களப்பு)
மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பகுதியில் அமைந்திருக்கின்ற CASED நிறுவனத்தின் காரியாலயத்தில் 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்நிகழ்வு இடம் பெற்றது.
மனித வள முகாமைத்துவ ஒரு வருட காலக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வினை கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரியும் CASED நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான இஸ்மாயில் பாத்திமா பிர்தெளஷியா தலைமை தாங்கி நடத்தினார்.
நிகழ்வின் பிரதம அதிதியாக CASED நிறுவனத்தின் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான H.M .அன்வர் கலந்து சிறப்பித்தார்.
இலங்கையில் தமிழ் பேசுகின்ற இளைஞர் யுவதிகளின் கல்வி அறிவினை மேம்படுத்தும் நோக்கத்தோடு சந்தைக்குப் பொருத்தமான விதத்தில் மனித வள முகாமைத்துவம் மற்றும் ஏனைய முகாமைத்துவ கற்கைநெறியினை முற்றிலும் இலவசமாக வழங்கிவருவதுடன் இம்முறையும் சுமார் 30மாணவர்களை உள்ளடக்கிய விதத்தில் இக்கற்கை நெறியினை வழங்கி இருந்தது.
CASED நிறுவனமானது கடந்த 8வருடங்களாக தமிழ்பேசும் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வாறான கல்வி நடவடிக்கைகளை சமூக நோக்கத்தோடு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



