மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டு காரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நஷ்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய விசித்திரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது
ஓய்வு நிலை கல்வி ஆசிரியர் ஆலோசகர் வீட்டில் 3 நாய்கள் வளர்த்து வருகின்ற நிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற முன்னாள் கல்வி அதிகாரியின் உறவினர்களை நாய் அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது இதனால் பக்கத்து வீட்டாருடன் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தினமாக சனிக்கிழமை (14) நாயின் உரிமையாளர் நாய்களை திறந்து விட்ட நிலையில் பக்கத்து வீட்டு பெண் ஒருவரை நாய் கடித்துள்ளது. இதனால், அப்பெண் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து நாயின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில், நாயிடம் கடி வாங்கிய பெண் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து நாயின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு இரு சாராரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண், நாய் கடித்ததற்கு தடுப்பு ஊசி போட வேண்டும் என தனக்கு நஷ்டஈடாக 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரினார்.
இந்த விசாரணையை தொடர்ந்து நாய் உரிமையாளர் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை வழங்க இணக்கப்பாட்டுக்கு வந்ததையடுத்து குறித்த முறைப்பாட்டை பொலிஸார் முடிவுக்கு கொண்டு வந்தனர்.
- கனகராசா சரவணன் –