எரிபொருள் பௌசர், முச்சக்கர வண்டி மோதி விபத்து; வைத்தியர் உயிரிழப்பு!
சேருவில – தங்கநகர் பகுதியில் சம்பவம்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் எரிபொருள் பௌசருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (17) இரவு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் சேருவில பகுதியில் இருந்து தோப்பூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர் திசையில் வந்த எரிபொருள் பௌசருடன் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எதிர் திசையில் அதே பக்கத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த நபருடன் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக மறுபக்கத்திற்கு முச்சக்கர வண்டியை செலுத்த முற்படுகையிலேயே எதிர் திசையில் வந்த எரிபொருள் பௌசருடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்தவர் சேருவில வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் கெல்வின் (வயது 59) எனவும் படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த அவருடைய நெருங்கிய உதவியாளர் என்.லாபீர் (வயது 55) எனவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்த வைத்தியர் மிகுந்த சேவை நோக்கம் கொண்ட வைத்தியர் எனவும் அவருடைய இழப்பு பாரிய இழப்பு எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
