7வது சீனா-தெற்காசியா ஒத்தழைப்பு மன்றத்தில் உரையாற்றினார் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா.

7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உரை

“அண்டை நாடுகளுடன் இணைந்த எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரில் நடைபெற்ற 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்டார்.

மன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், பிராந்திய ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை, அமைதியான இணை வாழ்வு மற்றும் கூட்டு வளர்ச்சி ஆகியவற்றிற்கான இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், பிராந்தியம் முழுவதும் நிலையான வளர்ச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த அண்டை நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.

பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கலாசார பரிமாற்றங்கள், வர்த்தக உறவுகள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இலங்கை–சீனா உறவு காலத்தால் சோதிக்கப்பட்ட நீண்டகால நட்புறவாகும் என அவர் குறிப்பிட்டார். இந்த வலுவான கூட்டாண்மை இலங்கையின் சமூக–பொருளாதார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், நாட்டின் வெளிநாட்டு உறவுகளின் முக்கிய தூணாகவும் தொடர்ந்தும் விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதியமைச்சர் அவர்கள் இலங்கையினுள் நிலையான, வெளிப்படையான, முதலீட்டாளர் நட்பு மற்றும் உலகத்துடன் தீவிரமாக இணைந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக இலங்கை அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளையும் அவர் விளக்கினார். நிலையான பொருளாதார வளர்ச்சிக்காக வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, டிஜிட்டல் மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விவசாயம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய அமைவிடத்தை குறிப்பிட்ட அவர், தெற்காசியா, கிழக்காசியா மற்றும் உலக வர்த்தக சந்தைகளுக்கு இடையிலான முக்கிய இணைப்பு மையமாக செயல்படும் திறன் இலங்கைக்கு இருப்பதாக பிரதிமைச்சர் தெரிவித்தார். அதேவேளை, தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவுடனான சீனாவின் தொடர்புகளுக்கான நுழைவாயிலாக யுன்னான் மாகாணத்தின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். சுற்றுலா, கல்வி, விவசாயம், தேயிலைத் தொழில், இரத்தினத் தொழில், சுகாதார சேவைகள், வர்த்தகம், போக்குவரத்து, புத்தாக்கங்கள் மற்றும் கலாசார பரிமாற்றம் போன்ற துறைகளில் யுன்னான் மாகாணத்துடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இலங்கை ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், இளைஞர் பங்கேற்பு, கல்வி பரிமாற்றங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றத்திற்கான தழுவல், பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் அமைதியான, வளமான பிராந்திய எதிர்காலத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிராந்திய மட்டத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பிற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, சீனா, தெற்காசிய கூட்டாளிகள் மற்றும் பல்தரப்பு தளங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, பகிரப்பட்ட இலக்குகளை முன்னெடுத்து செல்ல இலங்கை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். நாடுகள் ஒன்றிணைந்து வளர்ச்சியடையும், மக்கள் ஒன்றிணைந்து செழிப்பை அடையும் மற்றும் முழுப் பிராந்தியமும் ஒன்றாக முன்னேறும் எதிர்காலத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top