
- ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்
சிரேஷ்ட புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன் அவர்களின் மறைவு தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
வீரகேசரி பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளராக சுமார் நான்கு தசாப்த காலத்திற்கும் மேலாக பணியாற்றிய அவர், சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் திருகோணமலையில் இன்று (26.07.2026) காலமான செய்தியை அறிந்து நாம் ஆழ்ந்த துயருறுகிறோம்.
தனது புகைப்படக் கருவி ஊடாக வரலாற்றின் முக்கிய பக்கங்களை தத்ரூபமாக பதிவு செய்த அவர், இன வன்முறைகள், போர்க் கால நிகழ்வுகள், போராட்டங்கள், ஊடக மாநாடுகள், கலை கலாசார நிகழ்வுகள் என அனைத்தையும் பத்திரிகைகள், இணையத்தளம் வாயிலாக வெளிக் கொணர்ந்தார். அன்னாரின் இந்த அர்ப்பணிப்புமிக்க ஊடகப் பணி தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் ஊடகவியலாளர்களுடனும் நிறுவனங்களுடனும் நெருக்கமான உறவைப் பேணிய அவர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய நிகழ்வுகளை தனது கமராவினூடாக பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டு பங்களிப்பு நல்கியவர் என்பதையும் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூருகிறோம்.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர், சக ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
