2026-ம் ஆண்டில் நாம் கற்பனை செய்ததை விடவும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) நம் வாழ்வோடு கலந்துவிட்டது. ஆனால், ரோபோவிடம் போய் நாம் ஆசிர்வாதம் வாங்குவோம் என்று என்றாவது நினைத்திருப்போமா? ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதை உண்மையாக்கியுள்ளனர். அவர்கள் உருவாக்கியுள்ள “புத்தாராய்டு” (Buddharoid) என்ற ஏ.ஐ ரோபோ உலகையே தற்போது உற்றுநோக்க வைத்திருக்கிறது.
இது வெறும் இயந்திரம் அல்ல; பௌத்த மதக் குருவைப் போலவே உடை உடுத்தி, அதே போன்ற உடல் அசைவுகளுடன் (Humanoid) செயல்படும் அதிநவீன ரோபோ. இதில் பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்கள் கேட்கும் தத்துவார்த்தமான கேள்விகளுக்கும், தனிப்பட்ட சந்தேகங்களுக்கும் மிகத் துல்லியமாகப் பதிலளிக்கும் வல்லமை கொண்டது.
ஜப்பானில் ஒரு வினோதமான சிக்கல் நிலவுகிறது. அங்குள்ள இளைஞர்கள் யாரும் மதக் குருக்களாகப் பணியாற்ற விரும்புவதில்லை. இதனால் பல கோவில்கள் வாரிசுகள் இன்றி மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மறுபுறம், ஜப்பானின் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு ஆன்மீக ஆறுதல் கூற ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்த ‘கேப்’-ஐ இடைவெளியை நிரப்பவே கியோட்டோ பல்கலைக்கழகம் இந்த ரோபோ சாமியாரை தற்போது களம் இறக்கியுள்ளது.

