

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தினை மேம்படுத்தல் தொடர்பான விவசாய அபிவிருத்திக்குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (14) இடம் பெற்றது.
மாவட்டத்தில் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக 2025 ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர் வரும் ஆண்டில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத மேட்டு நிலங்களை அடையாளம் கண்டு அவற்றில் உணவுத் தேவைக்கான உளுந்து, பயறு, கெளப்பி,
சோளம், நிலக்கடலை போன்ற பயிரினங்களை மேற்கொண்டு மாவட்டத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் எனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனிர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் ஜெகன்நாத், விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதி கிருஸ்ணகோபால் திலகநாதன் மற்றும் பிரதேச ரீதியிலான பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
