பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் மறைவிற்கு ரவூப் ஹக்கீம் எம்.பி.இரங்கல் செய்தி.

மருத்துவப்பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்.

அவரது மறைவு நமது சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.

பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேசளவில் புகழ் பூத்த உண்மையான முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் மருத்துவப் பேராசிரியராகவும், மருத்துவ நிபுணராகவும் சீரும் சிறப்புமாகப்பணியாற்றி, அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டியதுடன், நாட்டின் சுகாதாரக்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் பின்னர்  றோயல் கல்லூரியிலும் கற்றுத்தேறிய அவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் பட்டம் பெற்று, பிரித்தானியாவில் பட்டப் பின்படிப்பை நிறைவு செய்திருந்தார். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பேராசிரியராகவும், கொழும்பு மருத்துவ பின்படிப்பு நிறுவனத்தில் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

அத்துடன், அவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்புப்பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

அவரது குறிப்பிடத்தக்க தொழில்முறை சாதனைகளுக்கு அப்பால், பேராசிரியர் ஷெரீப் தனது நோயாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து இலங்கையர்கள் மீதும் காட்டிய கருணை, பணிவு, மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நெடுகிலும் நினைவுகூரப்படுவார்.

அவரது மேன்மை, நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவை மரபு என்பன மருத்துவத்துறையில் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்தும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும். அவர் தனது தாராள மனப்பான்மைக்காகவும், இலங்கை முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் உட்பட தேவையுள்ளவர்களுக்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்காகவும் பரவலாக நன்கறியப்பட்டவர்.

இத்துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top