மட்டக்களப்பில் போதைப் பொருள் தடுப்பு மாவட்ட செயற்பாட்டுச் சபைக் கூட்டம்.

மட்டக்களப்பில் போதைப் பொருள் தடுப்பு மாவட்ட செயற்பாட்டுச் சபைக் கூட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (16) இன்று இடம்பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் “முழு நாடும் ஒன்றாக” “ரட்டம எக்கட்ட ” விஷ போதைப்பொருள் தடுப்பு தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்கான பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைள் தொடர்பான விளக்கங்களை மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் அளிக்கையினூடாக அமைச்சருக்கு தெளிவூட்டினார்.

இதன் போது கருத்து தெரிவித்த
அமைச்சர் எமது நாட்டுக்கு போதைப்பொருள் வரும் வழிகளை தடுத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயற்திட்டத்தை மேற்கொண்டு வருவதுடன் கல்லடியில் புனர்வாழ்வு நிலையம் எதிர்வரும் தினங்களில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் போதைப்பொருள் அற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் மூவின சர்வமத தலைவர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top