

சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்த சமூக ஊடகங்களை பயன்படுத்தல்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்கள் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், சுகாதாரத் தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு சமூக வலைத்தளங்கள் ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் செயல்படுத்த முடியும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தெரிவித்தார். “வருமுன் காப்போம்” என்ற மிக முக்கியமான சுகாதாரத் தத்துவத்திற்குப் போதிய விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில், “சுகாதார மேம்பாடுகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கு பற்றி கருத்துதெரிவிக்கும் போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திட்டமிடல் வைத்திய அதிகாரி பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr. எஸ். தனுசியா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் உள்ளடங்கல்களாக 60 நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் பிராந்திய பணிமனையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
18.06.2025 அன்று புதன்கிழமையன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.
சமூக ஊடகங்களின் பரந்த அணுகல் மற்றும் உடனடித் தகவல்பரிமாற்ற ஆற்றலைப் பயன்படுத்தி, பொதுமக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், நோய் தடுப்பு முறைகள் மற்றும் அவசரகால சுகாதாரச் செய்திகள் குறித்து எவ்வாறு திறம்பட விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.