“கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய தினம் (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை கொங்கிரீட் வீதியாக மாற்றும் வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் வீதியின் ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக வீதிக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

615 மீட்டர் நீளம் கொண்ட இந்த வீதியானது 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாத செயற்பாடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.ஜே.முரளிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பி.பரதன், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாநகர சபை உறுப்பினருமான வனிதா செல்லப்பெருமாள், திணைக்கள அதிகாரிகள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top