

மட்/மம/மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் 63ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலை, கலாச்சார மற்றும் கௌரவிப்பு நிகழ்வு கடந்த (06) ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் வி.டி. ஜனூன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண கிராமிய வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜே.எம். அல் அமீன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. சாஹித், பாடசாலையின் முன்னாள் அதிபர்களான எம்.எப்.எம். அலியார், எச்.எம்.எம். பாரிஸ், தாஹா குஸைன் மற்றும் அதிபர்களான ஏ.எல்.எம். நௌபி, எஸ்.எல்.டி. அஜ்மல்கான், சட்டத்தரணி எம்.எம். றவூப், ஏறாவூர் போக்குவரத்து சாலை முகாமையாளர் எம். சைனி, பொலன்னறுவை மாவட்ட அமானா வங்கி முகாமையாளர் ஆர். ஜிப்ரி, ஏறாவூர் நகரசபை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம். சகிக்கா பர்வின், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எப். பாதுஷா உள்ளிட்ட பலர் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் பாடசாலையின் உப அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், மாணவத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இவ்விழாவின் போது மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி மற்றும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றிருந்ததுடன் தேசியம்,மாகாணம், மாவட்ட மட்டங்களில் சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு பதக்கங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மேலும் இப்பாடசாலையில் கல்வி கற்று உயரிய நிலைகளை அடைந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அதிதிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
63ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாமிலும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று உதிரம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
